Friday 24 June 2011

உதவி கேட்பவர்கள்/பிச்சைக்காரர்கள்

நான் புதிதாக வாங்கிய வீட்டில் இருந்து அலுவலகம் வருவதற்க்கு தினமும் போரூர் ஜங்ஷன் தாண்டித்தான் வரவேண்டும். ஜங்ஷன் ஒருமுறை தாண்டியவர்களுக்கு தெரியும் அது ஒரு பெரிய தலைவலி என்று. ஒவ்வொரு சிக்னலும் இருபது நிமிடம் பிடிக்கும், சத்தியமாக என்னக்குக் காத்திருப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் அந்த நிமிடங்களில் நான் பார்க்கும் அபிநயங்களும், பாவனையும், கூத்துப்பட்டறையில் கத்துக்கொண்டவனுக்கு கூட வராது.

என் காரின் வலது பக்கம் ஒரு அம்மா தன் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு "அம்மா, கொழந்தைய பாரும்மா சாப்பிட்டு நாலு நாள் ஆகுது. யாருமே மனசு வந்து பிச்ச போடமட்டேன்குறாங்கம்மா, நீ மகராசி மாதிரி இருக்கம்மா, பார்த்தாலே தினமும் சாமிக்கும்பிடுவேன்னு தெரியுதுமா உனக்கு தெரியும்மா கடவுளே தர்மம் பண்ணுனு தானேம்மா சொல்றாரு. இந்தபுள்ளைக்கு சோறு போட்டேன்னா உன் புள்ளைய சாமி பத்திரமா பாத்துக்கும்மா." எனக்கு இத கேட்டவுடனே தூக்கி வாரிப் போட்டுச்சு.

என்ன மாதிரியான வார்த்தைகள் அவை. என் பக்தியைப் பற்றி பேசி, அதனால் என்ன பலன் என்று மறைமுகமாக கேட்டு, என் அறிவை நிலைகுலையச் செய்து, காசு பறிக்கிறாள்.  நிச்சயமா தன் பிள்ளையை வைத்து எந்தத் தாயும் தண்ணீர்  கூடக் கொடுக்காமல் நா வறண்டு விக்கி வக்கித் தவிக்கும் குழந்தையை வேடிக்கை காட்டி பணம் சம்பாரிக்க மாட்டாள். குழந்தையை தூக்கிக் கொண்டு பிச்சைஎடுப்பவள் தன்னுடைய பிள்ளையை எங்கே விட்டிருப்பாள்.   குறைந்தபச்சம் நிழலிலாவது உட்க்கார வைத்திருப்பாள் அல்லவா.  தாய் பாசம் தன் வயிற்றில் பிறந்தவளுக்கு தான் காட்ட வேண்டுமா?

அந்த சுயநலக்காரி என்னிடம் இருந்து எதுவும் வாங்க முடியாது என்று புறிந்துக் கொண்டு எரிச்சலில் சில சாபங்களை எனக்குக் கொடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த காருக்கு மாறிச்சென்று பிச்சை எடுத்தாள். ஆனால் அவள் கையில் வைத்திருந்த குழந்தையின் பிஞ்சி முகம் மட்டும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அது எதோ முனகியது தெரிந்தது. ஒருவேளை நான் உதவி செய்யவில்லை என்று நினத்திருப்பாலோ. அவளுக்கு நான் எப்படி சொல்ல நாங்கள் காசு போடுவதினால் தான் உன்னை கூவிக் கூவி விற்கிறார்கள் என்று. செல்லமே என்னைப் புரிந்துக் கொள் நான் வேறு விதமாக உதவ முயற்சிக்கிறேன் இதை என் உறுதி மொழியாக வைத்துக்கொள்.

மறுநாள் காலை அதே சிக்னல் நான் முன்தினம் நடந்ததை நினைத்துக் கொண்டிருக்கும் போதே நாலு வயது இருக்கும் பெண்குழந்தை பல வாகனங்களின் இடையே புகுந்து வந்து என் காரின் முன்னே வந்து சரமாரியாக ரோட்டை தொட்டுக் கும்பிட்டுவிட்டு "அம்மா, உங்க கால்ல வேணா விழுறேன் தயவுசெஞ்சு பிச்ச போடும்மா, பள்ளிக்கூடம் திறக்கறதுக்குள்ள நான் சம்பாரிப்பதை வச்சுத்தான் புத்தகமே வாங்கணும். நான் படிச்சா தாம்மா என் சொந்த கால்ல நிக்க முடியும், இல்லேன்னா வாழ்க்க முழுக்க இப்படித்தான் பிச்ச எடுக்கணும்."

எனக்கு என்னவோ அந்தப் பொண்ணு சொன்னது சரியாய் பட்டது. கண்ணாடியை இறுக்கி எங்க படிக்கிறன்னு கேட்டேன், பக்கத்துல இருக்குற தாழ்த்த பட்ட ஜாதிகாரங்களுக்கு ஒரு பள்ளி இருக்கு அங்க தான் படிக்கிறேன்னு சொன்னாள். உங்க அம்மா எங்கன்னு கேட்டதுக்கு, அவுங்க செதுப்போயிடாங்க என்று சொன்னால். உன்னை இப்போ யாரு பாத்துக்குறாங்கன்னு சொல்லு, நான் அவுங்க கிட்ட பேசி உன்னை என் கூட கூட்டிக்கிட்டுப் போறேன். உன்ன நல்லா படிக்க வைக்கிறேன்னு சொனேன். அவள் ரொம்ப சந்தோஷ பட்டவள் போல நடித்து நீங்க ஒரு ஓரமாய் நில்லுங்க நான் கூட்டிகிட்டு வரேன்னு சொன்னவ தான். இருபது நிமிஷம் ஆகியும் வரல. என்னோட முட்டாள் தனத்த நெனச்சி நானே அசிங்கப்பட்டுக் கொண்டேன். இவ்வளவு தெளிவாக ஏமாற்றுவதற்கு யார் சொல்லி கொடுத்து இருப்பார்கள்.

இவர்கள் தேவைக்காக பிச்சை எடுப்பதாய் எனக்குத்  தோன்றவில்லை. யாரோ ஒருவர் பயன் பெறவே இதைச் செய்வதாக தோன்றுகிறது. ஒருவேளை தடுமாறி வந்தவர்கள் சுகம் கண்டு தொடர்கிறார்களோ. பூ விற்க, செருப்பு தைக்க, பால் போட,  வீட்டு வேலை செய்ய, டேபிள் துடைக்க பணம் தேவை இல்லையே. ஆயிரம் ரூபாய் முதலீட்டில் எவ்வளவு சிறுதொழில் இருக்கிறது. தயவு செய்து குழந்தை தொழிலாளிக்கு எதிராக போராடுபவர்கள் என்னை மண்ணியுங்கள். பிச்சை எடுப்பதைவிட, அதனால் மானத்தையும், உயிரையும் இழப்பதை விட, வேலை பார்ப்பதே மேல்.

நான் அவளுக்காகக்  காத்திருந்த சமயத்தில், எத்தனை வகையான பிச்சைக்காரகள் சந்தித்தேன் தெரியுமா:

*      அரைகுறை ஆடையுடன் இல்லாத அழகை இருப்பதாகக்  காட்டி பணம் பிடுங்கிய அரவாணிகள்.

*     ஏதோ ஒரு புகையை விசிறியபடியே காசுகேட்டு கெஞ்சிய வாட்ட சாட்டமான வாலிபன்.

*    கண் பார்வை தெரியாத ஒரு கும்பல் வண்டிகளின் நடுவே சரியாக சென்று கை ஏந்தினார்கள்.

*    ஒரு காகிதத்தை கையில் வைத்துக்கொண்டு ஏதோ சைகையில் சொல்லி அவர்கள் கொடுக்கும் பணத்தை பெரிய தோள்பட்டை பையில் போட்டுக்கொண்டார்கள் தங்களின் எதிர்காலத்தையே தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத சில்வண்டுகள்.

*    முதுமை தங்களை சோதிக்க அதனிடம் ஜெயித்துவிடுவதற்க்காக தினமும் தோற்கும் ஆதரவு இல்லா முதியவர்கள்.


இதற்க்கு ஒரு இயக்கமே இருக்குன்னு சொல்றாங்களே அது உண்மையா? இதை தடுக்க எதாவது சட்டம் இருக்கா?  பிச்சை எடுப்பவர்களை தண்டிக்க எதாவது சட்டம் இருக்கா? இவர்களுக்கு எப்படி உதவினால் இவர்களை காப்பாற்றவோ திருத்தவோ முடியும். நாம் இன்று யோசிக்கா விட்டால் வளர்ந்து வரும் ஏழை பணக்காரன் இடைவெளி வளர்ந்து கொண்டே போகும். நாம் என்ன தான் கஷ்டப்பட்டாலும் இந்தியா முன்னேறிய நாடுகளின் வட்டத்திற்குள் கால் பதிக்க முடியாது.


எனக்கு ஒரு வழிதோன்றுகிறது, நம்மில் சிலர் சேர்ந்து ஒரு இயக்கத்தை உருவாக்கவேண்டும். அந்த இயக்கத்தில் மூலமாக ஒவ்வொரு பிச்சைக்காரர்களையும் சோதித்து அவர்கள் இத்தொழிலுக்கு வர காரணம் என்ன, மருத்துவ உதவி தேவை படுகிறதா என்று சோதித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். கலந்துரையாடலின் மூலமாக அவர்களைத் திருத்த முயற்சிக்கலாம் இல்லையேல் எதாவது உதவும் இல்லங்களில் சேர்த்து விடலாம், சிறு தொழில் ஆரம்பிக்க கற்றுத் தருவோம்.  கடைசியாக அவர்களுக்கு நம்மால் எந்த விதத்திலும் உதவி செய்ய முடியாது, வேறு வழியே இல்லை என்றால் நாமே ஒரு உத்தரவாத அட்டையைக் கொடுப்போம், அதில் அவர்களின் நிலைமையையும், எந்த இடத்தில பிச்சை எடுக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு கொடுத்தால் அதை காண்பித்து பிச்சை எடுத்துக்கட்டுமே. ஆனால் எனக்கு தெரிந்த வரையில் நிறைய வழிகள் இருக்கிறது அவ்வாறு நடக்காமல் பாதுகாக்க.

இது ஏதோ பெரிய விஷம் என்று நாம் நினைக்க வேண்டாம். தமிழ் நாட்டில் நிச்சயம் மனம் படைத்த ஐந்து மனநல மருத்துவர்கள் இருப்பார்கள், ஆயிரம் ஆயிரம் வசதி படைத்த நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், நிறைய பணத்தை நன்கொடையாக பெறும் காப்பகங்கள் இருக்கின்றன, பல்வேறு இலவச மருத்துவமனைகள் இருக்கின்றன, உதவி செய்வதற்க்காகவே காத்துக் கொண்டிருக்கும் சில தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. இல்லாத ஒன்றே ஒன்று ஒரு இயக்கம் இவர்களை வழிநடத்த. உங்களுக்குள் பல கேள்விகள் எழலாம், எப்படி பிச்சை காரகளுக்கு இதை தெரிய படுத்துவது? இதற்க்கு பல வழிகள் இருக்கின்றது ஒவ்வொரு டிராபிக் போலீசிடமும் நோட்டீஸ் கொடுத்து சொல்லலாம், சுவரொட்டி ஒட்டலாம், ரேடியோவில் தெருவிக்கலாம். முக்கியமாக நாம் கொடுக்கும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு பிச்சைப்  போடாதீர்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

இந்த இயக்கத்தை செயல் படுத்த நிறைய நல்ல உள்ளங்களும், உறுதியான நெஞ்சமும், இரக்கக் குணமும், இணையும் கைகளும் தேவைப் படுகிறது. தயவு செய்து எனக்குத் துனை நில்லுங்கள் பிச்சைக்காரர்களுக்கு கைகொடுங்கள்.

Monday 20 June 2011

""அத்த்த்ததத...""

"ஏன்தான் இந்த காலத்து பசங்களுக்கு பெரியவங்கள மதிக்கனும்ன்னே தெரிய மாட்டேங்குதோ. மொதோ நாள் காலேஜ் போரவ வீட்டுக்கு சீக்கிரம் வருவோம், என்ன நடந்துதுன்னு சொல்லுவோம்னு இல்லாம எங்க ஊரசுத்திகிட்டு இருக்காளோ தெரியல. ஏதாவது கேட்டா எடக்கு மொடக்கா பதில் சொல்ல வேண்டியது" என்று புலம்பிக் கொண்டே அடுப்பாங்கறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் சொர்னம்.

வாசலில் சத்தம் கேட்க்க எட்டிப்பார்த்தாள் அங்கே ரேவதி இரு தோழிகளுடன் வருவதை பார்த்து தன் கோவத்தை சற்று ஆறப்போட்டுவிட்டு கஷ்டப்பட்டு சிரித்தபடியே வெளியே வந்தாள்.

"அம்மா இங்க பாருங்க எனக்கு புதுசா ரெண்டு பிரண்ட்ஸ் கெடச்சிருக்காங்க நேஹா, கயல்விழி. இவங்க ரெண்டு பேருமே பக்கத்து தெருதாம்மா, இனிமே நீ என்ன பத்தி ஈஸியா துப்புத்துலக்க முடியும்" நக்கலாக சிரித்தாள்.

"ஹாய் ஆன்ட்டி" என்று முடித்துக் கொண்டாள் கயல்விழி.

"ஹாய் ஆன்ட்டி, நான் நேஹா. எங்க அம்மாவும் அப்பாவும் தாலுக்கா ஆபீஸ்ல வேலை பாக்குறாங்க. எனக்கு பிரண்ட்ஸ்னா ரொம்ப புடிக்கும் அதுவும் ரேவதியை ரொம்ப புடிச்சிடுச்சு அதான் ஒடனே வந்து வீட்டையும், உங்களையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன். நான் படிச்சதெல்லாம் சென்னை தான், அதனால எல்லோர்கிட்டயும் சகஜமா பழகீடுவேன். என்னோட பிரண்ட்ஸ் எல்லோரும் எங்க அம்மாவுக்கும் பிரண்ட்ஸ் ஆன்ட்டி. நீங்களும் கூடிய சீக்கிரம் எங்க வீட்டுக்கு வரனும் ஆன்ட்டி."  பேசிமுடித்துவிட்டு பதிலுக்காக காத்திருந்தாள் நேஹா.

மழலையின் இனிமையும் முதுமையின் அனுபவமும் ஒன்றுசேருவது கடினமே. அனால் நேஹாவின் பேச்சையும் செய்கையும் பார்த்து அது இரண்டும் ஒன்று சேர்ந்ததாகவே சொர்னம் உணர்ந்தாள். கொஞ்சம் அதீதமாகவே நேஹாவை பிடித்திருந்தது. அதிலிருந்து மீண்டு "அதுக்கென்னம்மா கூடியசீக்கிரம் வந்துட்டா போச்சு" என்று சொல்லிக்கொண்டே அவள் வேலையை தொடர ஆரம்பித்தாள்.

தோழிகள் மூவரும் தங்கள் பள்ளிக்கூட நாட்களை பற்றியும், பிடித்தது, பிட்டிக்காதது, எதிர்நோக்குவது என்று பல விஷயங்களை பேசி என்றுமே பிரியா நடப்பை உருவாகிக் கொண்டிருந்தார்கள். அது என்னவோ சொர்னத்திற்கு நேஹா பேசிய அனைத்தும் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் தோன்றியது. ஆனால் நேஹாவிற்கு திடீர் திடீர் என்று வரும் இருமல் சத்தம் மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால் அவள் மனம் பேச்சில் ஒன்றுபட மறுத்தது, பேச்சை நிறுத்திவிட்டு ரேவதியிடம் "நீ கல்லூரியில் சொன்ன பாட்டியா அது, அவுங்களுக்கு என்ன அச்சு ஏன் இருமிகிட்டே இருக்காங்க"

"அமாம் டி, அவுங்க தான். ரொம்ப ஒடம்பு முடியல, முதியோர் இல்லத்திலே மருந்து கொடுத்து இருக்காங்க அத சபிடாம சும்மா இருமிகிட்டே இருக்காங்க. எனக்கும் பேசும் போது அது தான் உறுத்திகிட்டே இருந்துது."

நேஹா சற்று சிந்தித்து விட்டு ஏதோ நியாபகம் வந்தவளாய் அடுப்பாங்கறைக்கு எழுந்து சென்றாள். அங்கே சொர்னம் மாவு அரைத்துகொண்டு இருப்பதை பார்த்து "என்ன ஆன்ட்டி ரொம்ப வேலையா, கொஞ்சம் சுடுதன்னி போடணும் பாத்திரம் எங்க இருக்கு? "
"நானே போட்டு தரேன்மா, நீ போய் பேசிக்கிட்டு இரு"
"இல்ல ஆன்ட்டி உங்களுக்கு எதுக்கு சிரமம், நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லி அவள் பதிலுக்கு எதிர் பார்க்காமல் உள்ளே சென்று வெண்ணீர் போட்டு, அதிலே கொஞ்சம் இஞ்சி, மிளகு, சீரகம் போட்டு நல்ல கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டினாள். அவள் சொர்னத்தின் உதவியை எதற்குமே எதிர் பாக்கவில்லை. நேஹா என்ன செய்கிறாள் என்றே தெரியாமல் குழம்பி போய் நின்றால் சொர்னம். அனாலும் அவளுடைய சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, அறிவு இதையெல்லாம் பார்த்து ஸ்தம்பித்து போனாள்.  அப்பா, அம்மா இருவருமே வேலைக்கு போகிறார்கள் அனாலும் இவ்வளவு பொறுப்பா வளர்த்து இருக்கங்களே, நாம ரேவதிக்காக வேலையெல்லாம் விட்டுட்டு இருந்தும் அவளை பொறுப்பாக வளக்க முடியலையே என்று அவளுக்குள் பொலம்பி கொண்டிருந்தாள். 
"ஆன்ட்டி கொஞ்சம் அச்சிவெல்லம் மட்டும் கொடுங்க, எனக்கு கண்டு பிடிக்க முடியல"
"இதோ தரேன்மா"
வெல்லத்தை இடித்து, கொதிக்க வைத்த தன்னீரில் கரைத்து கசாயம் செய்தாள். கொஞ்சம் கசாயத்தை டம்ளரில் நிரப்பி எடுத்துக்கொண்டு பாட்டியிடம் சென்றாள்.
"பாட்டி நான் ரேவதியோட தோழி, இந்தாங்க மொள்ள எழுந்து இந்த கஷாயத்தை குடிங்க, நாலு நாள் குடிச்சா இருமல் சுத்தமா நின்றுவிடும்" கைத்தாங்கலாக உட்காறவைத்து கொஞ்சம் கொஞ்சமாக கசாயத்தை குடிக்க வைத்தாள்.
"ம்ம்ம், ம்ம்ம்" பாட்டிக்கு பதில் சொல்ல கூட முடியாமல் கண்ணீரிலேயே தன் நன்றியை தெரிவித்தாள்.  
 "என்ன பாட்டி காரமா இருக்கா, வீரியம் கூட இருந்தால் தான், மருந்து நல்லா வேலைசெய்யும், கொஞ்சம் கஷ்ட பட்டு குடிங்க பாட்டி"
இல்லைமா!! எனக்கு காரத்தையும், கஷ்டத்தையும் தாங்கும் சக்தி என் கணவர் நிரந்தரமாக பிரிந்தபோதோ,  என் மகன் முதியோர் இல்லத்தில் விட்ட போதோ   பழகிக்கொண்டேன். ஆனால் நீ செலுத்தும் அன்பை தாங்க எனக்கு சக்தி எனக்கு இல்லைமா என்று சொல்லணும் போல தோன்றியது, கண்ணீர் மட்டுமே பேசியது.

நேஹா மொள்ள பாட்டியை படுக்க வைத்துவிட்டு சர்வ சாதாரணமாக சொர்னதிடம் டம்ளரை கொடுத்தாள்
"ஆன்ட்டி, உங்களுக்கு நிறைய வேலை இருக்குமேன்னு தான் நாலு நாளைக்கு தேவையான கசாயத்தை செய்து வச்சுருக்கேன், நீங்க குளிர்பெட்டியில் வைத்து, தினமும் சுட வச்சு பாட்டிக்கு கொடுங்க"

சொர்னத்திற்கு நேஹாவின் மீது இருந்த ஆச்சர்யம் கொஞ்சகொஞ்சமாய் விலகி தன் மேல் தனக்கே ஒரு வெறுப்பு தோன்றியது. அதை மறைப்பதற்காக   ஏதேதோ பேசினாள்.
"நான் வேலையெல்லாம் முடிச்சிட்டு சுடுதன்னி தரலாம்ன்னு இருந்தேன், அதுக்குள்ள நீ கசாயமே வச்சுட்ட. தப்பா நெனச்சிக்கதம்மா என்னக்கு ஒரு வேல தான் ஒரு சமயத்துல செய்ய வரும், மாவு அரச்சிகிட்டே இத செய்ய தோனல."   

இதை சட்ரும் எதிர் பாக்காத நேஹா "ஆன்ட்டி, ஆன்ட்டி, நான் உங்களை குத்திக்காட்டுவதற்காக இதை செய்ய வில்லை, எனக்கு தோணினதை செஞ்சேன். அது மட்டும் இல்ல நீங்க செஞ்ச நல்லதோட நான் செஞ்சது ஒன்னுமே இல்ல. நான் உங்க சேவைக்கு ஒரு துரும்பை தான் கிள்ளிப்போட்டேன். தயவு செஞ்சி இதுக்காக நீங்க இவ்ளோ யோசிக்காதீங்க" 

சொர்னத்துக்கு ஒன்னுமே புரிய வில்லை. இவள் வீட்டு வேலை செய்வதையா இவ்ளோ பெரிய விஷயமா சொல்றா. கேட்டு தெரிஞ்சிக்கணும்னு ஒரு முடிவுக்கு வருவதற்குள் நேஹா தொடர்ந்தாள்.
"இன்னைக்கு கல்லூரியில் ஆசிரியர் ரேவதிக்கிட்ட உங்களுக்கு மறக்க முடியாத தருணம் என்னனு கேட்டாங்க, அப்போ அவ சொன்னத கேட்ட போது உங்கமேல ஒரு தனி மரியாதை தோன்றியது, உடனே உங்கள பாத்து பாராட்டணும்னு நினைத்தேன், நீங்க ரொம்ப நல்லவங்க ஆன்ட்டி."   
"ரேவதியா! என்ன பத்தியா! என்னமா சொன்னா?" சொர்னத்திற்கு பதில் கேட்க்க கூட பொறுமையில்லை. என்ன சொல்லி இருப்பா நான் அவளுக்காக வேலையே விட்டுவிட்டு, பொழுதுபோக்கு இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருப்பாளோ...
நேஹா சொர்னத்தின் முகத்தில் விழும் சுருக்கத்தை வைத்து கேள்வியை புரிந்து கொண்டாள் "நீங்க செஞ்ச விஷயம் உங்களுக்கு பெருசாவே தெரியலயா. நேற்று நீங்க யாருன்னே தெரியாத இந்த பாட்டியை தத்தெடுத்தது பற்றித்தான் சொன்னேன். எனக்கு தெரிஞ்சி குழந்தை இல்லாதவர்கள், தன்னுடைய ஏக்கத்தை போக்க, தன்னுடைய சந்தோஷத்திற்காக, தன்னோட சொத்துக்காக தத்தெடுப்பாங்க. ஆனால் நீங்கள் எவ்வளவு பெரிய மனசு இருந்தா காஞ்சு சருகாகப்போற ஒரு செடிக்கு தன்னி ஊற்றி உயிர் கொடுத்துருக்கீங்க. நிச்சயமா குத்தமே சொல்ல முடியாத ஒரு தாய் மனம் உங்ககிட்ட இருக்கு. என்னால இவ்ளோதான் வார்த்தையால சொல்ல தெரியும்." இதை சொல்லும் போது நேஹாவின் கண்கள் கலங்கி விட்டது.

சொர்னத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையில் இருந்த அர்த்தம் உணரவே சற்று நேரம் ஆகும்போல தோன்றியது. "நீ எப்படிமா இவ்ளோ பொறுப்பா இருக்க, உன்னோட கனிவான பேச்சு, உதவிசெய்யனும்கற துடிப்பு, இதெல்லாம் பார்த்தா உங்க அப்பாவும் அம்மாவும் எவ்ளோ அக்கறையோட உன்ன வளத்துருப்பங்கன்னு தெரியுது"
"ஐயோ ஆன்ட்டி, எனக்கு ஒன்னும் நான் பொறுப்பான பொண்ணு மாதிரியெல்லாம் தெரியல"
"அனால் ரேவதியோட உன்ன பார்த்தா நிறைய வித்தியாசம் தெரியுது"
"அப்படியெல்லாம் இல்ல ஆன்ட்டி, இருந்தாலும் உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி, அனால் நீங்க சொன்ன மாதிரி நான் இப்படி இருக்கரதுக்கு ரொம்ப முக்கியமான கரணம் என் பாட்டி. என் பெற்றோர்கள் வேலைக்கு போறதுனால என் பாட்டி தான் என்ன கஷ்டப்பட்டு வளத்தாங்க, சின்ன சின்னதா நான் செய்த தவறுகளுக்கு கூட பெரிய பெரிய கதை சொல்லி என்ன திருத்துவாங்க. என் பாட்டி எனக்கு சொல்லி கொடுக்கும் ஒவ்வொரு விளையாட்டும் ஒரு நல்ல பண்பை சொல்லி கொடுக்கும். என்னோட அம்மாவும் என் பாட்டிக்கு முழு சுகந்திரத்தையும் கொடுத்து வளக்க உதவி செஞ்சாங்க. "
"பாட்டியா !!!"
"அமாம் ஆன்ட்டி பாட்டியே தான், எங்க அம்மா வேலையை விட்டு பாத்துகிட்டா  பணத்துக்கு கஷ்ட படனும், அதனால என் பாட்டி எங்க குடும்பத்துக்கு உதவியா கூடவே இருந்துட்டாங்க. நீங்க ஒன்னும் கவலை படாதீங்க உங்களோட ரேவதியும் கொஞ்ச நாள்ல மாறிடுவா "
"ஏன்மா நீ மாத்திடுவியா" 
"கிண்டல் பண்ணாதீங்க ஆன்ட்டி, அதான் நீங்க இந்த பாட்டிய தத்தெடுத்திருக்கிறீங்கலே, இனிமே அவுங்க பாத்துப்பாங்க. நீங்க உங்க வேலையை பாத்தா அவுங்க ரேவதிய பாத்துப்பாங்க, கவலபடாதீங்க."

பேசிக்கொண்டே மணியை பார்த்தாள் நேஹா "அய்யய்யோ நேரம் ஆயிடுச்சு, நான் அம்மா கிட்ட ஒருமணி நேரத்துல வரேன்னு சொன்னேன், நான் கெளம்புறேன் ஆன்ட்டி நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்கு வாங்க. " 
"கயல் வா போகலாம்"
"இதோவந்துடேன் டி"
"ரேவ் டாட்டா, பாட்டி வரேன், ஆன்ட்டி டேக்கேர் " என்று சொல்லிவிட்டு  பரபரப்பாய் கிளம்பினாள் நேஹா.

இருவரையும் வழியனுப்பிவிட்டு வந்து அமர்ந்த சொர்னத்திற்கு நேஹா விட்டு சென்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப ஒலித்தது. அவள் மனமே அவளை நையாண்டி செய்வதை உணர்ந்தாள். அவள் மகள் எதுவும் உணராதவளாய்  இருப்பது இன்னும் கோபத்தை மூட்டியது. அவளை குத்தம் சொல்லி என்ன பலன் நாம் வளர்த்ததில் குற்றம். நாமலே சரியாய் இல்லாத போது அவளைசொல்லி என்ன பலன். அவள் நேற்று இரவு தன் கணவனிடம் சாமி ஆடியதை நினைக்காமல் இருக்க முடியவில்லை "என்னயா மனுஷன் நீ, என்கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு போன. உங்க அம்மா இங்க வந்தா அவுங்க எல்லா வேலையும் பாத்துப்பாங்க நீ உக்காந்து டிவி பாக்கலாம், ஏற்கனவே நீ ரொம்ப கஷ்ட்ட பட்டுட்ட அவுங்க வந்தா கொஞ்சம் ஒய்வு எடுக்கலாம் அது இதுன்னு சொன்ன, முதியோர் இல்லத்துக்கு போனாதானே தெரியுது உன்னோட களவானி தனம். அவுங்களால இதுக்குமேல பாத்துக்க முடியாதுன்னு தொரத்திவிடராங்கன்னு. நீ எவ்வளோ பெரிய ஆளுயா, என்னையே ஏமாத்துற."
"நான் சொன்னதுல என்னடி தப்பு, அவுங்க சரியானோன உடனே அவுங்க நீ கற்பமா இருந்த போது பாத்துகிட்ட மாதிரி கட்டாயம் பாத்துப்பாங்க"
"என்னய்யா குத்தி காமிக்கிறியோ, அது எப்போ உக்காந்து, நான் எப்போ வேலவாங்கறது. ஒழுங்கா உன் தம்பி கிட்ட போயி விட்டுட்டுவா " அவள் நினைவுகள் இருமல் சத்தத்தில் கலைந்தது, அவளையும் மீறி "இதோ தன்னி எடுத்துட்டு வரேன் அத்தை" எழுந்து சென்று தன்னி கொடுத்தால் சொர்னம்.
"உனக்கு ஏம்மா என்னால கஷ்டம், இப்படியே விட்டுட்டா இந்த கட்டை முதியோர் இல்லத்தில் அனாதை பிணமாக சாகாமல் என் பையன் வீட்டில் பெருமையுடன் சாகுமே. " என்று பாட்டி தழுதழுக்க தன் கடைசி ஆசையை சொல்லி முடித்தாள்.

இறுகிய கோழி முட்டையின் ஓடை உடைத்துக்கொண்டு உயிர் பெற்று வரும் குஞ்சு போல சொர்னத்தின் ஆணவத்தை துண்டு துண்டாய் உடைத்துக்கொண்டு கண்ணீர் வெளிவந்தது.  கைகள் கண்ணீரை துடித்தாலும் குரல் நடுங்குவதை தவிர்க்க முடியவில்லை "அத்த்த்ததத.. உள்ள வந்து படுங்க".





Tuesday 7 June 2011

காளிபிலோவேர் தூள் பஜ்ஜி / கோபி மஞ்சுரியன்

நான் கொடைக்கானலுக்கு என் நண்பர்களுடன் சென்றிருந்தேன். நாங்கள் தங்கிஇருந்தது ஒரு தனி வீடு அதில் சமயல் ஆட்கள் மட்டும் இருப்பார்கள் , நமக்கு வேண்டியதை சுட சுட செய்து தருவார்கள்.  அவர்கள் செய்த அனைத்தும் சுவையாக இருந்தது. அதீத குளிரில் சுட சுட பரிமாறியதால் அப்படி இருந்ததா இல்லை சுற்றி பார்த்து விட்டு வந்த உடன் களைப்போடு உன்றதால் அப்படி சுவையாக இருந்ததா என்று தெரிய வில்லை.  அனைத்தையும் அவர்கள் பத்து நிமிடத்துக்குள் செய்து விடுகிறார்கள். அவர்களிடம் இருந்துதான் கோபி மஞ்சுரியன் கத்துக்கொண்டேன், தைரியமாக செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:


காளிபிலோவேர் - 1 பூ.
மைதா மாவு - 1 கரண்டி
சோள மாவு - 1 கரண்டி
இஞ்சி பூண்டு அரைத்தது - 2 தேக்கரண்டி
சக்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
நறுக்கிய பூண்டு - 1 கரண்டி (அதிகமாக சேர்த்தல் சுவை கூடுதலாக இருக்கும்)
சோயா சாஸ் - 2  தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2  தேக்கரண்டி
எண்ணெய் - வருக்கும் அளவு
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி


செய்முறை: 

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்த நீரில் காளிபிலோவேர் பந்தை போட்டு மூடிவிடுங்கள், இதை பத்து நிமிடம் விட்டுவிடுங்கள். இடைப்பட்ட நேரத்தில் மாவு தயரித்து வைத்து கொள்ளலாம் .

மைதா மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு அரைத்தது, சக்கரை, உப்பு இவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள். பஜ்ஜி மாவு பதத்தில் இருக்கட்டும். சிறிய கடாயில் என்னை ஊற்றி அடுப்பில் சுட வையுங்கள். என்னை காய்வதற்குள், காலிப்ளவரை சிறு சிறு பூக்களாக உதிர்த்து கொள்ளுங்கள். பின் பூக்களை கலந்துவைத்த மாவில் முக்கி எண்ணையில் போட்டு சிவக்க வரும்வரை வறுத்து எடுங்கள். இந்த வறுவல் சுவையாக இருக்கும். குழந்தைகள் சாப்பிடும் வகையில் இனிப்பாகவும் இருக்கும்.

மேலும் ருசிசேர்க்க, ஒரு வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தையும், பூண்டையும் போட்டு நன்றாக வதக்கி அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும், இத்துடன் வருத்த காளிபிலோவேர் சேர்த்து கிளருங்கள். நன்றாக கலந்ததும் வெங்காயத்தாள், மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி உடனே இறக்கிவிடுங்கள். இப்போது கோபி மஞ்சுரியன்  ரெடி, தவறாமல் பிறருக்கு கொடுத்து டெஸ்ட் செய்துவிட்டு நீங்கள் சாப்பிடுங்கள் :) மறக்காம ருசியான காபி போட்டு குடிச்சி கிட்டே இதையும் சாப்பிடுங்க.


என் மகளை பிரிந்திருந்த போது உதித்தது


பாசம் ,    ' பற்று  இவையெல்லம் உயிர் என்றேன்,  
பண‌ம் '  அது வெறும் உடல் என்றேன் (பித்துப்பிடித்தவள்). 

நானே உலகம் என என் கால்களைக் கட்டிக் கொண்டே விளையாடிய என் குழந்தையின் பாசத்தை,
அவளைப் பார்த்துக் கொண்டே இருப்பது தான் என் உலகம் என்று வாழந்த என்னுடைய பற்றையும்,
சொற்ப/ஆதரவான‌ மாத சம்பள‌த்திற்காக விட்டுக் கொடுத்தேனே, ஆமாம்;
விட்டுவிட்டு வந்தேனே அவளை என் மாமியார் வீட்டில்.

"உயிர் வாழ உடல் வேண்டும் அல்லவா இந்த வயதில் தான் புரிந்தது எனக்கு."




சட்டை கலைவது அழகா?
கலைக்கும் மகள் இல்லாத பொழுது தான் தெரிந்தது எனக்கு!

சிதறிய சாமான்கள் சித்திரமா?
தூக்கி போட்டுவிட்டுச் சிரிக்கும் பிஞ்சு முகம் இல்லாத போது புலப்பட்டது!

க‌த்துவ‌தும் ர‌சிக்க வேண்டிய‌ லையா‌!
நான் பேசிய‌தை என‌க்கே திருப்பி சொன்ன‌ வெறுமை வீடு உணர்த்திய‌து!

உப‌த்திர‌ம் செய்வ‌து ந‌ல்ல‌தா?
ஒன்றை உடைத்து, ஒன்றைக் கொடுத்துச் ச‌மைக்கும் போது உப‌த்திர‌ம் செய்ய‌ நீ இல்லாத‌ பொது புரிந்த‌து!

இத்த‌னையும் உணர்த்திய பிரிவும் ந‌ல்ல‌தே!
பொருமையை கற்றுக் கொடுத்த‌ வில‌‌க‌லும் ந‌ல்ல‌தே!

Friday 3 June 2011

ருசியான காபி!!!


தினமும் நான் எழுந்தவுடன் முதல் வேலையாக காபி போட்டு சுட சுட செய்திகள் படித்துக்கொண்டே   குடிப்பது வழக்கம். குடிக்கும் போதே பல விஷயங்களை 'அய்யய்யோ', 'அடப்பாவிங்களா', 'இது நல்லா இருக்கே' என்று எனக்கு நானே சொல்லி கொண்டு குடித்து முடிப்பது வழக்கம். இந்த வழக்கத்தில் சில மாறுதலும் உண்டு, ஞாயிறு மட்டும் காபி குடித்து விட்டு தான் எழுவேன் அதுவும் ஒரு சுகம்.

அனால் இன்று என் வீட்டில் நடக்க இடம் இலலாமல் விருந்தினர்கள் வந்திருக்கிறர்கள், அவர்கள் உண்மையில் விருந்தினர்கள் அல்ல என் மாமியார், மாமனார், நார்தனார் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் தான். இந்த காசு பார்க்கும் வாழ்கையில் அதாவது சென்னை வாழ்கையில் அவர்களும் விருந்தினர்கள் ஆகிவிட்டனர்.

காலை எழுந்தஉடன் பால் காச்சி வழக்கம்போல முதலில் என்னக்கு காபி போட்டு வைப்பதற்குள் என் மாமியார் எழுந்து விட்டார், பின் நார்தனார், பின் மாமனார், ...,  ஒவ்வொருவருக்காய் காபி போடு கொடுத்து விட்டு, பின் பசங்களுக்கு boost , pediasure  எல்லாம் கலந்து கொடுத்து விட்டு வந்து செய்தித்தாள் படிக்க அமர்தேன். எல்லாரும் எழுந்த பிறகு எழுவது தான் என் கணவரின் வழக்கம். எழுந்தவுடன் "ஓஓஓஓய்ய், குட் மோர்னிங், நீ காபி குடிச்சியா"  என்றார். "ம்ம்ம் நான் குடிசிட்டேங்க, உங்களுக்கு கொண்டு வரவா", என்ற படியே காபியை கலக்க துவங்கி விட்டேன். மனதில் ஒரு பட்டாம்பூச்சி என்ன ஒரு பரவசம் எதுக்குன்னு பாக்குறீங்கள? அவர் வீட்டார் முன்னிலையில் அம்மா கோபித்து கொள்ளுவாளோ அப்பா தவறாக நினைப்பரோ என்று எண்ணாமல் என்னை பற்றி கேட்டது என்னக்குள் அப்படி ஒரு சந்தோசம் பரவ காரணம். நான் மிகைபடுதவில்லை, நாம் தனியே இருக்கும் போது எவ்வளவு அக்கறையாய் இருந்தாலும் அது பெரிதாக இருக்காது, அவர் சொந்தங்கள் முன்னிலையில் நம்மை பார்த்துக்கொள்ளும் போது அதில் எதோ ஒரு கூடுதல் சுகம். என்னக்கு தெரிந்த வகையில் ஆண்கள் அதில் எதிர்மறை!!

அவருக்கு காபி கொடுத்து விட்டு நான் மெல்ல வந்து என் காபியை குடிக்க துவங்கினேன், சூடு இல்லை, ஆடை படிந்திருந்தது, எழுந்து சென்று சுடவைக்க சோம்பேறித்தனம். பரவாயில்லை என்று கொள்ளை பசி சொல்லியது, நானும் குடித்தேன். குடிக்கும் போது ஏனோ நினைவுவந்தது : "உன் காபியில் ஏதோ ஸ்பெஷல் இருக்கு" என் நார்தனர் ஆசையாய் கூறியது, "உன் கையாள காபி குடிச்ச்சத்தான்மா எழுந்திரிக்கவே மனசு வருது" என் கணவர் அடுத்த காபிக்கு அடி போட்டது, "இது நம்ப ஊரு காபி பொடில போட்டது தானே" மறைமுகமாக என் மாமனார் பாராட்டியது. அந்த காபி குடித்து முடிக்கும் போது தான் உணர்தேன்  ஆறிய  காபியிலும் ருசி இருப்பதை! என் மனதில் திருப்தி படர்திருப்பதை! நான் நேசத்திற்கு அடிமை ஆகி இருப்பதை!

Thursday 2 June 2011

எதை நோக்கி இந்த பயணம்!!!



நான் களவும் கற்ற புத்திசாலியும் அல்ல, முற்றும் அறிந்த ஞானியும் அல்ல. என்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை, ஒரு சாதாரண கணினி பொறியாளர். அரை லெட்சம் சம்பளம் வாங்கினாலும், நூறு ருபாய்கு கணவனை எதிர் பார்க்கும் பெண்.
என் அப்பா அரசியலில் இருந்ததாலோ, என் அம்மா வாத்தியாராக இருந்ததாலோ, சமுக சிந்தனை சிறிதாக மனதில் ஒட்டிகொன்டே இருக்கிறது. என்னால் இந்த சமூகத்திற்கு எந்த பலனும் இல்லை, என் புலம்பளையவது இந்த சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள அசை படுகிறேன்.
இந்த இணைபக்கம் எதை நோக்கி போக போகிறது என்பதை நான் அறியேன். உங்களுக்கும் எனக்கும் உதவும் வகையில் அமய்பதே என் எண்ணம். வேண்டுகிறேன் உங்கள் வாழ்த்துக்களை.